அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது : சென்னையில் ஜெ.,
சென்னை: 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களியுங்கள் என்று சென்னையில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் மே 14ம் தேதி சனிக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சித்தலைவர்களின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் ஹெலிகாப்டரில் சென்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இம்மாதம் 6ம் தேதி தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார். இன்றைய தினம் சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

தொண்டர்கள் கூட்டம்
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டமாக இருக்க பிற்பகல் 3 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலையில் விழுந்த அதிமுகவினர்
ஜெயலலிதாவின் பிரச்சார வேன் சாலையில் வருவதைப் பார்த்த அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் நடு ரோட்டிற்கு வந்தார். அப்போது ஜெயலலிதா வேனை மெதுவாக ஓட்டச் சொல்ல, நடு ரோட்டில் விழுந்து வணங்கினார் அந்த அதிமுக நிர்வாகி.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதலில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி காலத்தில் வசந்தம் வீசுவதாக கூறினார். தமிழத்தில் வசந்தம் தொடர்ந்திட நூர்ஜகானுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

அமைதிப்பூங்கா தமிழகம்
தொடர்ந்து எழும்பூர், துறைமுகம், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக கூறிய ஜெயலலிதா, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களியுங்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

கொளத்தூரில் திமுகவிற்கு அட்டாக்
தொடர்ந்து கொளத்தூர், விருகம்பாக்கம், அண்ணாநகர் தொகுதிகளில் வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா. பகல்நேரம் என்பதால் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டது. பல தொகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய ஜெயலலிதா, கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது மட்டும் 2006 - 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாக கூறினார்.

மின்வெட்டு பிரச்சினை
கருணாநிதி ஆட்சி காலத்தில் பொதுமக்களின் நிலம், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக கூறிய ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும் மின்வெட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றார். மின்வெட்டே இல்லை என்ற நிலை நீடித்திட, ஏழைகள் ஏற்றம் பெற்றிட அதிமுகவிற்கு மீண்டும் ஆதரவு அளியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.

வேனில் இருந்தவாரே பிரச்சாரம்
ஏழைகள் ஏற்றம் பெற்றிட புரட்சித்தலைவர் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் 15 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் சில நிமிடங்கள் மட்டுமே வேனில் அமர்ந்தவாரே பேசினார் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகாலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையை செல்லும் இடங்களில் எல்லாம் கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications