உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும் - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டார். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது.
•தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
•உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
•உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை. எனவே, இது தொடர்பான 3 அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
•புதிய அரசாணை வெளியிட்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வரை உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
•அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றிருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications