கர்நாடகவின் நந்தினி பாலை விற்க மாட்டோம்- தமிழக பால் வியாபாரிகள் அதிரடி
சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் கர்நாடக அரசின் "நந்தினி" பால் மற்றும் பால் பொருட்களை நாளை (13.09.2016) முதல் பால் முகவர்கள் எவரும் கொள்முதல் செய்யாமல் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக பால் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத்தலைவர் பொன்னுச்சாமி விடுத்துள்ள அறிக்கை :
நமது தமிழக விவசாயிகளுக்கு காவேரி நீரை திறந்து விட மறுத்து கர்நாடக அரசும், கர்நாடக அரசியல்வாதிகளும், கன்னட வெறியர்களும் துரோகம் இழைத்து வருவதோடு, தொடர்ந்து பல இடையூறுகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் வசித்து வருகின்ற தமிழர்களுக்கு பல இன்னல்களையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் காவேரி தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட கர்நாடக வாழ் தமிழரை 10க்கும் மேற்பட்ட கன்னட வெறியர்கள் சூழ்ந்து கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த மனித மிருகங்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வராமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசையும், கர்நாடக காவல்துறையையும், கன்னட வெறியர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இன்னும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வரும் மத்திய அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பல ஆண்டுகளாக காவேரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசிற்கும், கர்நாடக வாழ் தமிழர்களை தொடர்ந்து தாக்கி வரும் கன்னட வெறியர்களுக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் தமிழகத்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் கர்நாடக அரசின் "நந்தினி" பால் மற்றும் பால் பொருட்களை நாளை (13.09.2016) முதல் பால் முகவர்கள் எவரும் கொள்முதல் செய்யாமல் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி அனைவரும் புறக்கணிக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழகத்திற்கு காவேரியை நிரந்தரமாக திறந்து விடும் வரை கர்நாடகாவில் இருந்து வரும் எந்த ஒரு பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை பால் முகவர்கள் அனைவரும் கொள்முதல் செய்யாமல் புறக்கணித்து தமிழக அரசின் ஆவின் மற்றும் தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என்று பொன்னுச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்ம ஊரில் உள்ள ஆவின் போல கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படுவது நந்தினி பால் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications