ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு.. முகவர்கள் சங்கம் கண்டனம்
ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தை வழங்கிட காரணமாக இருந்த ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்தத்தை "தீபிகா டிரான்ஸ்போர்ட்" எனும் பெயரில் அதிமுக பிரமுகரான வைத்தியநாதன் பெற்றிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வரும் போது அவரது ஊழியர்கள் பாலினை திருடி விட்டு அதற்குப் பதில் கிணற்று தண்ணீரை கலந்து கொண்டு வந்ததாக கையும் களவுமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஆவின் பால் கலப்பட வழக்கினால் சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்தம் ரத்தான வைத்தியநாதன் என்பவர் தற்போது "கே.ஆர்.கே." எனும் வேறு ஒரு பெயரில் ஒப்பந்தம் பெற்றிருப்பதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பல லட்சக்கணக்கான லிட்டர் பாலினை திருடி, குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் பலருக்கும் உயிர் காக்கும் பொருளாக விளங்கும் பாலிற்கு பதில் சுகாதாரமற்ற கிணற்று நீரை கலந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு கொண்டு போய் சேர்த்த வைத்தியநாதன் மீது வெறும் 1.5லட்சம் மதிப்பிலான பாலினை மட்டுமே திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பாலினை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்தத்தை வைத்தியநாதன் என்பவருக்கு வேறு ஒரு பெயரில் மீண்டும் வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே பொதுமக்கள் உயிரோடு விளையாடி, ஆவின் நிறுவனத்திற்கு பல கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, தற்போது "ஆவின் நிறுவனத்தின் ஹிட் லிஸ்டில் இருக்கும்" வைத்தியநாதன் என்பவருக்கு "வேறு ஒரு பெயரில் வழங்கியிருக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" எனவும், "இந்த ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கிட காரணமாக இருந்த ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" எனவும் "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.