நளினிக்கு மட்டும் கருணை காட்டிய கருணாநிதி அமைச்சரவை
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:-
"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும்; மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."
திரு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு மேதகு ஆளுநர் அவர்கள் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
திரு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் பாதிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் மேதகு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனர். இந்த கருணை மனுக்களை 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.