சென்னை அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய அமைப்பினர் 200 பேர் கைது !
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய அமைப்பினர் 200 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு கடந்த 4 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றபட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து முறையான விசாரணைக்கு பின்னரே நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் உள்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினோம் என ஐ.நா.வுக்கான சவுதி அரேபியா அரசின் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் ஷியா மதத் தலைவர் உள்பட 47 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கு அமெரிக்காவின் பின்புலமே காரணம் எனக் கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஷியா முஸ்லீம் ஜமாத் அமைப்பினர் நேற்று சென்னையில் பேரணி நடத்தினர்.
ராயப்பேட்டையில் இருந்து அமெரிக்க துணை தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது தமிழ்நாடு ஷியா முஸ்லீம் ஜமாத் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா.சபையில் முறையிடப்போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications