உதயமானது ‘தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி’- கொடியை அறிமுகப்படுத்திய ராமதாஸ்
நேற்று கோவையில் ‘தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி' என்ற புதிய கட்சி யின் தொடக்க விழா பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் அக்கட்சியின் நிறுவன தலைவராக சி.ஜே.ராஜ்குமார் பொறுப்பு ஏற்றார். இப்புதியக் கட்சியானது பாமக தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்புதிய கட்சியின் கொடியை ராமதாஸ் அறிமுகப் படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 3 கட்சிகள் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்தபோதிலும், தெலுங்கு மக்களுக்கு எந்தவித உரிமை, மற்றும் உதவி களை வழங்கவில்லை. 34 அமைப்புகளை ஒன்றிணைத்து புதிய கட்சியை சி.ஜே.ராஜ்குமார் தொடங்கியுள்ளார். தெலுங்கு மக்களுக்கு சமூக பொருளாதார, அரசியல் அங்கீகாரத்தை இந்த கட்சி பெற்று கொடுக்கும்.
சமூக ஜனநாயக கூட்டணியுடன் இந்த கட்சி இணைவதன் மூலம் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி சிறுபான்மையினர் 6.7 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரம் வெளியிட்டனர். இப்போது அதிக அளவில் இந்த சமுதாயத்தினர் உள்ளனர். தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த சமுதாயத்தினர் ஏராளமான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய கட்சியின் தலைவர் சி.ஜே.ராஜ்குமார் பேசுகையில் :-
தமிழ்நாட்டில் 2 கோடி பேர் தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடும் திட்டம் இல்லை. ஆனால் சமூக ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த உதவுவோம்' என்றார்.
நேற்றைய நிகழ்ச்சியில் புதிய கட்சியின் கொள்கைகளாக, ‘தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். தெலுங்கு அகாடமியை தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தெலுங்கு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் புதிய கட்சி தொடக்க விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.டி.அரசகுமார், தெலுங்கு மக்கள் கட்சியின் துணைத்தலைவர் எஸ்.வி.பரமசிவம், பொதுச்செயலாளர் பூ.வெ.கோபால், துணைபொதுச்செயலாளர் கொ.வெங்கடேசன், வரதராஜ், மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.