ஜல்லிக்கட்டு... வரலாறு பேசும் 'இளங்காளைகள்' நடத்திய 21 மணிநேர தமிழர் உரிமை மீட்புக்கான தவவேள்வி போர்
தமிழர் உரிமை மீட்புக்கான போராட்ட களத்தில் அலங்காநல்லூர் இடம்பெற்றுவிட்டது. 21 மணிநேரம் கண் துஞ்சாத களமாடிய இளங்காலைகள் இப்போது கைது செய்யப்பட்டாலும் இப்போராட்டம் வரலாறு நெடுகிலும் பேசப்படும்.
சென்னை: இந்தி எதிர்ப்பு போர், ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு அடையாள மீட்புக்காக அலங்காநல்லூரில் 'இளங்காளைகள்' 21 மணிநேரம் நடத்திய தவவேள்வி போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது.
ஜல்லிக்கட்டு என்பது ஏதோ ஒரு சில இடங்களில்தான் நடக்கும் என திட்டமிட்ட பொய் பிரசாரம்; ஜல்லிக்கட்டுவை நடத்தும் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என அவதூறு பேச்சுகள். இதனை அமைதியாக 2 ஆண்டுகாலம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது இளைஞர் சமூகம்.
ஆனால் இனியும் தாமதிக்கப்போவதில்லை என தன்னெழுச்சியாக- அரசியல் கட்சிகள், இயக்கங்களைக் கடந்து சென்னையில் போர்க்களத்தைத் தொடங்கி வைத்தது இளைஞர் படை. சென்னையில் பற்றவைத்த சிறுபொறி பெருநெருப்பாக மதுரை, கோவை, தஞ்சை என தமிழ் மண்ணெங்கும் பற்றி எரிந்தது.

மிரண்ட அரசாங்கம்
இதன் உச்சமாக அலங்காநல்லூரில் திங்கள்கிழமை தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுவிட அரசாங்கம் மிரண்டு போனது.. அதிலும் வாடிவாசல் அருகே அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுக்க கைகோர்த்து அமர்ந்தனர் இளைஞர்கள், பெண்கள். இவர்கள் எப்படியும் 5 மணிக்குள் கலைந்துவிடுவார்கள் என காத்திருந்தது காவல்துறை.

அதிர்ந்த அதிகார வர்க்கம்
ஆனால் 5 மணியை கடந்தும் இரவை தாண்டியும் நள்ளிரவிலும் விடிய விடிய இந்த போராட்டம் தொடர அதிர்ந்துபோனது அதிகார வர்க்கம். குடிநீரும் உண்ண உணவும் இல்லாததை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் போர்க்களத்திலேயே தங்கியிருந்தனர் இளைஞர்கள்.

கைது செய்த போலீஸ்
இனியும் இப்போராட்டம் தொடர்ந்தால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்பதால் வலுக்கட்டாயமாக இப்போது இளைஞர்களையும் பெண்களையும் கைது செய்துள்ளது காவல்துறை.

இளங்காளைகளின் சரித்திர போராட்டம்
அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை போர்க்களமாக்கிய இளங்காளைகளின் இந்த சரித்திரப் போராட்டம் தமிழர் உரிமை மீட்புப் போரில் நீங்கா இடம்பெற்றது. வெட்ட வெளியில் கொட்டும் பனியில் தங்களை தியாகிகளாக்கிக் கொண்டு தவவேள்வி நடத்திய இந்த இளங்காளைகள் தமிழர் வரலாறு நெடுகிலும் மாபெரும் முன்னுதாரணமாக திகழ்வர்!












Click it and Unblock the Notifications