ஆளுநர் பதவியா? ஏற்கமாட்டேன்: தமிழருவி மணியன்
சென்னை: தமக்கு மத்திய அரசில் பதவி கிடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் அதை ஏற்க மாட்டேன் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கு பெரும் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன். அதுவும் தேமுதிக- பாமகவை பாஜக கூட்டணிக்கு வர படாதபாடுபட்டுவிட்டார் தமிழருவி.
ஒரு கட்டத்தில் வெறுத்தே போய், கூட்டணி விவகாரத்தில் மாட்டுத் தரகர் போல விஜயகாந்த் செயல்படுகிறார் என்றெல்லாம் கூட விமர்சிக்கவும் செய்தார் தமிழருவி மணியன். இப்போது தமிழருவி மணியன் ஆசைப்பட்டபடி காங்கிரஸ் வேரறுக்கப்பட்டு ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை.
மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழருவி மணியனுக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக சமூகவலைதளங்களில் கொளுத்திப்போடப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழருவி மணியனும் கூட, மத்திய அரசில் எனக்கு பதவி கிடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் அதை ஏற்கும் நிலையில் மணியன் இல்லை. அரசு சார்ந்த அதிகாரத்தில் இருக்கமாட்டேன் என்ற லட்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.