தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் அதிமுக வெல்லும் நிலை ஏற்படலாம்.. தமிழிசை
சென்னை: தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் அதிமுக வெல்லும் நிலை ஏற்பட்டு விடலாம். திமுகவும் இந்த சூழலை தனக்கு சாதமாக்கிக் கொள்ள முடியும். எனவேதான் அதைத் தடுக்கவே தேமுதிகவை எங்களது அணிக்கு அழைக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.
தேசிய அளவில் பாஜக வலிமையான கட்சியாக இருந்தாலும் தென் மாநில சூழல் வேறு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாலைமலர் இதழுக்கு தமிழிசை அளித்துள்ள பேட்டியிலிருந்து...

ஏன் வளரவில்லை பாஜக?
கே தேசிய அளவில் வலிமையாக விளங்கும் பாஜக தமிழகத்தில் அந்த அளவுக்கு வளர்ச்சி அடையாததற்கு என்ன காரணம்?
ப: வடமாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் சூழ்நிலைகள் வேறுபடுகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தான் வடமாநிலங்களில் பிரபலமானவை. காங்கிரஸ் கட்சியின் ஊழல், குடும்ப அரசியல் காரணங்களால் மக்கள் நலன் காக்கும் கட்சியாக பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மிசா காலகட்டத்தில்
மிசா காலக்கட்டத்தில் கூட வடமாநிலங்களை விட துரதிர்ஷ்டவமாக தமிழக மக்கள் மாற்றித்தான் வாக்களித்தார்கள். மொழியை வைத்து பிரிவினையை தூண்டி அரசியல் செய்து மக்களை திசை திரும்பினார்கள். மாநில உணர்வை தூண்டிவிடுவது நேர்மறையான அரசியல் என்பதைவிட எதிர்மறை அரசியலாகத்தான் இருந்து வருகிறது. தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் கூட மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. வெதேசிய கட்சிகளுக்கு வெற்றிடம் இருப்பது உண்மை தான். தேசப்பற்றோடு கட்சியை மக்களிடம் புரிய வைப்பது சிரமமாகத்தான் இருந்தது. இப்போது நிலைமை மாறி இருக்கிறது.

தடுமாற்றம் ஏன்?
கே: மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்தில் கூட்டணி அமைக்க தடுமாற்றம் ஏன்?
ப: தடுமாற்றமும் இல்லை. தடம் மாறவும் இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கினோம். புதுவை உள்பட 3 எம்.பி.க்களை கைப்பற்றினோம். 19.5 சதவீதம் வாக்கு கிடைத்தது. அப்போதும் இரண்டு கட்சிகளை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தது. தேர்தலுக்கு பிறகு அவரவர் கட்சியை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தனர். பா.ஜனதா தீண்டத்தகாத கட்சி அல்ல.

பலவீனம் அல்ல
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே எங்களோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் தான். இப்போது நல்ல விசயத்துக்காக, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவதற்காக ஒவ்வொருவரிடமும் பேசியது எங்கள் பலவீனம் அல்ல. பலத்துக்காகத்தான்.

மாற்று சக்தி
கே: மாற்று சக்தி என்கிறீர்கள். அதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறீர்கள்?
ப: நிச்சயமாக வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட்டு கணிசமாக வாக்குகள் பெற்றோம். இப்போதும் தெளிவான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கூட்டணி அமையாவிட்டால் நாங்கள் தான் மாற்று என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி நிச்சயமாக தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோம். எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்குவோம்.

அதிமுக திட்டமா?
கே: அதிமுகவுக்காக பா.ஜனதா போட்டுக்கொடுத்த திட்டத்தின்படித்தான் விஜயகாந்த் தனித்துப்போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே?
ப: அப்படிப்பட்ட ஒரு மலிவான, எதிர் மறையான அரசியலை பா.ஜனதா ஒருபோதும் செய்யாது. அதற்கான அவசியமும் இல்லை. சூழ்ச்சி செய்து உதவுவதாக இருந்தால் நேரடியாகவே கூட்டணி அமைத்து இருக்கலாமே. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. தனித்துப்போட்டி என்பது தே.மு.தி.க.வின் நிலைப்பாடு. இதில் பா.ஜனதாவின் பின்புலமோ, ரகசிய உடன்பாடோ கிடையாது.

வாய்ப்பு உள்ளதா?
கே: விஜயகாந்தோடு கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதா?
ப: வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. ஊழல், நிர்வாக சீர்கேடுகள் மலிந்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் வலுவான கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறோம். உதிரிகளாக இருப்பதைவிட உறுதியாக இருப்போம்.

கடமை உள்ளது
அதிமுகவுக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது. இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு அணியை மக்கள் தேடுகிறார்கள். அதை கொடுக்கும் கடமை இந்த கட்சிகளுக்கு உள்ளது. அதை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து விரைந்து பணியாற்றுவோம். தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் மத்தியில் நிலவும் திராவிட கட்சிகளின் எதிர்ப்பை பயன்படுத்தும் வகையில் கூறுகிறோம்.

தலைவர்கள் விட்டுக் கொடுக்கலாம்
கே: விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்கிறீர்கள். முதல்வர் வேட்பாளரை பா.ம.க. விட்டுக்கொடுக்க மறுக்கிறதே? அதற்காக நீங்கள் விட்டுக்கொடுப்பீர்களா?
ப: தலைவர்கள் விட்டுக்கொடுத்து விடலாம். ஆனால் எல்லா கட்சிகளுக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் பணியில் தொய்வு ஏற்படும். முதல்வர் வேட்பாளராக இருப்பதைவிட தேர்தலுக்கு பிறகு அறிவிப்பது சிறப்பாக இருக்கும். வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்தால் தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த முடியும். இன்னார் தான் முதல்வர் என்று கடவுள் எழுதி வைத்திருந்தால் அவர் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

ராமதாஸ் பேச்சு
கே: பாஜகவுடனான கூட்டணி பேச்சில் இன்னும் பாக்கி இருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே?
ப: நான் ஏற்கனவே சொன்னதை அடிப்படையாக வைத்து தான் எல்லா கட்சிகளோடும் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினோம். இனி முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் தான் இருக்கிறார்கள். முற்றிலுமாக பாஜக வேண்டாம் என்றும் அவர்களால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் முதல்வர் வேட்பாளர் என்பதை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை.

அதிமுகவுக்கு சாதகமாகலாம்
கே: இப்படி போட்டி ஏற்பட்டால் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறதே?
ப: யதார்த்தமாக உண்மையாகக்கூட இருக்கலாம். அ.தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள் தான் என்று தி.மு.க.வும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயலும். அதனால் தான் விஜயகாந்த் தனது முடிவை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். இந்த அணியை வலுப்படுத்த முன்வர வேண்டும் என்று அழைக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications