நடிகர் ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.. தமிழிசை வருத்தம்
நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தில் நேற்று பேசியது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசியதாவது: அரசியல் கட்சிகள் சரியாக செயல்படவில்லை என ரஜினி கூறுவதை ஏற்க முடியாது. மக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்காலம் இருக்கும்.
எல்லாரும் தெளிவாக நடைபோடட்டும் பின்பு மக்கள் எடை போடுவார்கள். ஒட்டு மொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களும் சரியில்லை என ரஜினி கூறியிருக்க மாட்டார்.
மாற்று சக்தியாக நாங்கள் இருப்போம். ரஜினியும் அதையேதான் கூறியிருக்கிறார். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.