இரவு முழுக்க என் தொலைபேசி அடித்துக்கொண்டே இருக்கிறது- தமிழிசை குமுறல்
இரவு முழுக்க தனது தொலைபேசி அடித்துகொண்டே இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: இரவு முழுக்க தனது தொலைபேசி அடித்துகொண்டே இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக கிண்டலடித்து மீம்ஸ்களை வெளியிட்டனர்.
இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் விக்கிப்பீடியா பக்கத்திலும் கைவைத்து சிலர் வேலையை காட்டியுள்ளனர்.

தவறான தகவல்கள்
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்வது கருத்துரிமை என்றால் விமர்சனத்தை எதிர்ப்பதும் கருத்துரிமை தான் என்றார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றியும் மத்திய அமைச்சர்கள் குறித்தும் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒளிந்துகொண்டு போராடாதீர்கள்
தவறான தகவல்களைப் பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீசார் அடையாளம் கண்டு அவர்களை நீக்க வேண்டும் என்றும் தமிழிசை கோரிக்கை விடுத்தார். அடையாளத்தை வெளிப்படுத்தி போராடுங்கள் என்ற அவர் இணைதளத்தில் ஒளிந்துகொண்டு போராடாமல் வெளிப்படையாக போராடுங்கள் என்றும் அவர் கூறினார்.

தகாத வார்த்தைகளால்..
இரவு முழுவதும் தனது செல்போன் அடித்துக்கொண்டே இருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து சிலர் போன் செய்து தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறினார்.

இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்
மேலும் போனில் கொன்றுவிடுவேன் கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார். இந்த சலசலப்புக்கெல்லாம் தான் அஞ்சவில்லை என்றும் தமிழிசை கூறினார். இருப்பினும் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழிசை கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications