ஆம்புலன்சில் பணம் கடத்துவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: விபத்தில் சிக்கிய காயமடைந்தவர்களின் உயிரைக்காக்க பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணத்தைக் கடத்துவது வேதனை அளிக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை கமாலாலயத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை கண்டிப்பாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

100 கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து மக்களுக்காக தயாரித்த தேர்தல் அறிக்கை இது. இளங்கோவன் எங்கள் தேர்தல் அறிக்கையை விஷ வித்துக்கள், சமூக நீதி பாதுகாப்பு இல்லாத அறிக்கை என்று கூறி இருக்கிறார்.
காங்கிரசுக்கு எங்களுடைய தேர்தல் அறிக்கை சவாலாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஏற்கனவே ஏழை, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுப்பது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
கரூரில் கட்டு கட்டாக பணம் சிக்கியது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஏன்னென்றால் அந்த பணத்தை ஆம்புலன்சில் எடுத்து சென்றது வருத்தம் அளிக்கிறது. ஆம்புலன்ஸ் உயிரை காப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் பணத்தை கடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக படுகொலை. இனி ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் நிறுத்தி சந்தேகப்பட்டு சோதனையிட வேண்டிய நிலை ஏற்படும்.
சிறு வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்தை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்கிறது. ஆனால் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டபோது ஏன் கைப்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழும்புகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரிடமும் பணம் கைப்பற்றி இருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்.
மக்களை காக்க வேண்டிய காவல்துறையினரே ஆளுங்கட்சிக்கு காவல் காப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது. உயர் அதிகாரிகள் இடமாற்றங்கள் செய்யப்பட்டது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது சரியானது தான். ஆனால் தவறான வாக்குப்பதிவு செய்ய விட கூடாது என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications