எச்.ராஜா, எஸ்வி சேகருக்கு எதிராக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதினாரா தமிழிசை?
பாஜக பிரமுகர்களான எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்சி தலைமையிடம் புகார் அளித்ததாக செய்திகள் வந்துள்ளன.
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அதிருப்தி அடைந்த தமிழிசை அவர்கள் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தமிழிசை மறுத்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் வைரமுத்துவை எச்.ராஜாவும், எஸ்வி சேகரும் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் எச்.ராஜாவின் தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்க வில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதுகில் ஆபரேஷன் செய்தபோது ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கருணாநிதி எழுந்து நிற்காதது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் எச்.ராஜா பரப்பினார்.
இதற்கு அவரை கழுவி கழுவி ஊற்றினர். இதுபோல் தொடர்ந்து பாஜக மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் எச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்த தமிழிசை கட்சி மேலிடத்தில் புகார் செய்ததாக தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறுகையில் எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது எந்த அதிருப்தியும் இல்லை. பாஜக தலைமைக்கு எந்த கடிதத்தையும் நான் அனுப்பவில்லை.
கட்சி பலமடைந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications