தமிழகத்தின் உரிமையை பெற்றத்தர பாஜக துணை நிற்கும்... தமிழிசை உறுதி!
காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர தமிழக பாஜக துணை நிற்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : விஞ்ஞானப்பூர்வமான வேளாண் நிலைமையை நாம் கொண்டு வர வேண்டும். 36 கிளைகள் காவிரியில் இருக்கின்றன, அதில் கிளை அணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டும், நீர்நிலைகளை தூர்வாற வேண்டும்.
நிறுவனங்களுக்கு நீரை கொடுக்கும் போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நீர் மேலாண்மை செய்து குறைவான நீரில் நிறைவான பயிர் உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
தமிழக நலனில் அக்கறை
கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.
மத்திய அரசின் தீர்ப்பல்ல
உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக பார்ப்பது சரியான பார்வையாக இருக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக கருத முடியாது, கர்நாடக காவிரி அரசு இது வரை நமக்கு முழுமையாக 50 டிஎம்சிக்கு மேல் காவிரி நீரை கொடுத்ததே கிடையாது.
சட்ட அணுகுமுறை வேண்டும்
இன்று நமது உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நமக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை, நிலத்தடி நீர் மட்டம் உண்மையிலேயே உயர்ந்திருக்கிறதா என்பதை பார்த்து அதிலும் சட்ட அணுகுமுறையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
பாஜக துணை நிற்கும்
வேளாண் துறையில் பல முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சொட்டு நீர் பாசன முறையை சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அவற்றையெல்லாம் நாம் மேம்படுத்த வேண்டும், தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் தமிழக பாஜக உறுதியோடு இருக்கும் என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்கள் உறுதியோடு தெரிவித்திருக்கிறோம் என்றும் தமிழிசை கூறினார்.