நிர்மலா சீதாராமனுக்கு பதவி... பெருமைப்படாமல் எதிர்ப்பதா?... விஜயதாரணிக்கு தமிழிசை விளாசல்
நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயதாரணிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயதாரணிக்கு தமிழிசை பதில் கொடுத்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசு அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தாக்கல் செய்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னையில் ஒருவிழாவில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும் தாக்கல் செய்தது.
எனினும் நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் மத்திய அரசு பல்டி அடித்தது. இதனால் மருத்துவ கனவு பறி போன ஏக்கத்தில் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்
நிர்மலா சீதாராமன் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என கூறி மக்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை
அப்போது இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு அருண் ஜேட்லி வசம் கூடுதலாக இருந்த பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி கண்டனம் தெரிவித்தார்.

தமிழர்களை கிண்டல்....
இதுகுறித்து விஜயதாரணி கூறுகையில் நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அனிதா உயிரிழந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழக மக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்றார் அவர்.
|
தமிழிசை காட்டம்
விஜயதாரணிக்கு டுவிட்டரில் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் ஆனதை அனைவரும் பெருமைப்படுகையில் விஜயதாரணியின் எதிர்கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications