கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தால் நீட் தேர்வை ஆதரித்திருப்பார்... தமிழிசை சவுந்திரராஜன்
திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தால் நீட்தேர்வை ஆதரித்திருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை ஆதரித்திருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நீட் தேர்வை ஆதரித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ஆதரித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அப்போது பேசிய வானதி ஸ்ரீனிவாசன் நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, தாம்பரம் நகர், சண்முகம் சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது : இன்று நீட் தேர்வு வைத்தாலும் அதனை சந்திக்கும் தெம்பும் திராணியும் எனக்கு இருக்கிறது. திமுக எத்தகைய போராட்டம் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
காஞ்சி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தாம்பரத்தில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டபோது.@BJP4TamilNadu #NEET pic.twitter.com/TBTtaN0XnO
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) September 15, 2017
திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை முடியடிப்போம். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதற்கு ஆட்சியாளர்களும் திமுகவுமே காரணம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை அனுமதித்திருப்பார். நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று தமிழக இளைஞர்கள் கூற மாட்டார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
நீட்டை ஆதரித்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் அரியலூர் மாணவி அனிதாவின் படமும் இடம்பெற்றிருந்தது. அனிதாவின் படத்திற்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.