குஷ்பு என்ன பேசினாலும் எங்களுக்குக் கவலை இல்லையே... தமிழிசை பதிலடி!
சென்னை: குஷ்புவை விட்டு பேச வைக்கிறது காங்கிரஸ். இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படவே போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, தமிழிசை தன்னைக் கிண்டல் செய்ததற்கு பதிலடி கொடுத்துப் பேசியிருந்தார். என்னை எல்லோருக்கும் தெரியும், நாடு முழுவதும் தெரியும். ஆனால் தமிழிசை பாஜக தலைவரான பிறகுதான் அவரை தபால்காரர்களுக்கேத் தெரியும் என்று அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழிசை தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் செய்யாமல் இப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பா.ஜ.க.வை மக்கள் விரோத அரசு என விமர்சிக்கிறார்.
காங்கிரசார், குஷ்பு போன்றவர்களை வைத்து பா.ஜ.க.வை விமர்சனம் செய்கிறார்கள். குஷ்பு போன்றவர்கள் விமர்சனம் செய்வது குறித்து பா.ஜ.க. கவலைப்படவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. வரும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும். இதை பொறுத்துக்கொள்ளாமல் பா.ஜ.க. மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறி வருவது பா.ஜ.க தொண்டர்களை புண்படுத்துகிறது. எனவே அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை பெறும் கட்சியாக பா.ஜ.க. கண்டிப்பாக மாறும்" என்றார்.












Click it and Unblock the Notifications