பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலத்தில் யாரும் சென்டம் இல்லை- காரணம் என்ன?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்டம் வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 10ஆம் வகுப்பில் 100 மதிப்பெண் வழங்குவதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.
அதே முறையே பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதிலும் கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த ஆண்டு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் யாருக்குமே 200க்கு 200 வழங்கவில்லை.
பத்தாம் வகுப்பிலும் 100க்கு 100 கிடையாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிலும் இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, சென்டம் மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.