தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் என்மீது திமுக தாக்குதல்: சபாநாயகர் தனபால் திடுக் புகார்
நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இங்கே நடந்துகொண்டது திட்டமிட்டு நடந்த நாடகம் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுகவிடுத்த கோரிக்கையையும், வாக்கெடுப்பு நாளை தள்ளி வைக்கவிடுத்த கோரிக்கையையும் சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதையடுத்து சபாநாயகருடன் திமுக உறுப்பினர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு 1 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் அமளி தொடர்ந்ததால் 3 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைவெளியில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதன்பிறகு சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெட்கப்படுகிறேன்
இதன்பிறகு சபாநாயகர் தனபால் கூறியதாவது: இன்று காலையில் நடந்த சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை என்றாலும், பாரம்பரியமிக்க இந்த சட்டசபையில் அதுகுறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என நினைத்திருந்தாலும், நான் நீலிக்கண்ணீர் வடித்ததாக எதிர்க்கட்சி தலைவர் பேட்டி கொடுத்துள்ள காரணத்தால், எனது மனது மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு சிலவற்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். இதை தெரிவிக்க மிகவும், வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்.
எளியவன்
மிகமிக தாழ்த்தப்பட்ட, சாமானிய எளிய குடும்பத்திலிருந்த என்னை, பள்ளத்திலிருந்து கை கொடுத்து தூக்கிவிடுகிற மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியிலே, இந்த பதவியிலே அமர்த்தப்பட்டேன். தொட்ரந்து இரண்டாவது முறையாகவும் அமர்த்தப்ப்டடேன். சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட, அருந்ததி சமூகத்தை சேர்ந்த இந்த எளியவனை மிக உயர்ந்த இந்த பதவியில் அமர்த்தி, நான் சார்ந்த சமூகத்தின் விடிவெள்ளியாக செயல்பட்டவர் மாண்புமிகு அம்மா.
என் சமூகத்தை இழிவுபடுத்திவிட்டனர்
நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இங்கே நடந்துகொண்டது திட்டமிட்டு நடந்த நாடகம். ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட இன மக்களை ஒடுக்கிவிடலாம் என திமுக இப்படி நடந்திருந்தால், நான் சார்ந்த சமூகத்தின் சார்பில் தனபால் என்ற தனிமனிதனான நான் எதிர்க்க கடமைப்பட்டுள்ளேன். சுதந்திரம் பெற்று இத்தனை வருடம் ஆனபிறகும், இந்த சமூகம் முன்னேறக்கூடாது, இச்சமூகத்தில் யாரும் முன்னேறக்கூடாது, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் உயர் பதவியிலிருக்க கூடாது என்பதற்காக நடத்தப்பட்டதாக இந்த குழப்பத்தை கருதுகிறேன்.
நடவடிக்கை இல்லை
திமுகவினர் திட்டமிட்டு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அவைக்கு வந்துள்ளனர். திமுக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றிருக்கும். அவர்கள் செய்யும் அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. விதிமுறைகள் படிதான் வாக்கெடுப்பை நடத்தியுள்ளேன். இப்பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் இத்தோடு விடுகிறேன். இவ்வாறு தனபால் தெரிவித்தார்.