சென்னையில் 5 நாட்களில் 72% மழை பெய்தாலும் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கை... ஆய்வுக்குப் பின் முதல்வர்
சென்னையில் 5 நாட்களிலேயே 72 சதவீதம் மழை பெய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் 5 நாட்களில் மட்டுமே 56.6 செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கட்டளை, சிட்லபாக்கம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கம் மற்றும் கீழ்க்கட்டளை பகுதிகளில் 2வது நாளாக மழை பாதிப்புகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். அங்கு திக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 5 நாட்களில் மட்டுமே 72 சதவீதம் மழை பெய்துள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டுமே 56.6 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. பருவமழையின் போது 2 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 5 நாட்களில் கொட்டித் தீர்த்தது. எனினும் அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து நீரை அகற்றியுள்ளது. மொத்தம் 315 இடங்களில் மழை நீர் தேங்கியது, இவற்றில் 200 இடங்களில் நீர் அகற்றப்பட்டுவிட்டது. இதே போன்று 22 சுரங்கப் பாதைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மக்கள் பாதிக்காமல் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க 600 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மழை நீர் நிரந்தரமாக வடிய வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.