கர்நாடக ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு.. தமிழகத்தில் பல இடங்களில் காங்கிரஸ் போராட்டம்
கர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகிறது.
சென்னை: கர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்டி பாஜக கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பாஜக கட்சிக்கு தற்போது 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆயினும் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பாஜக கட்சிக்கு அழைப்பு விடுத்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளை காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க ஆளுநர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது. இந்த நிலையில் சில மாநிலங்களில் இப்போதே போராட்டம் நடத்து வருகிறது.
மணிப்பூர், கோவா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அதிகாரம் கோர உள்ளது. இதனால் தற்போது தமிழகத்திலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது சென்னை திருவொற்றியூர், தாம்பரத்தில் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல் மதுரையில் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா ஆளுநர் முடிவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications