இலங்கைச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 94 மீனவர்கள் - தமிழகம் திரும்பினர்
: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 94 மீனவர்களும் பத்திரமாக தமிழகம் வந்து சேர்ந்தனர்.
கடந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை, ராஜேந்திரன், தினகரன், முருகன் ஆகிய 4 பேருக்கு சொந்தமான விசைப் படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், கடந்த மாதம் 27-ந் தேதி நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற காரைக் கால் மீனவர் ஒருவர் உள்பட 33 பேரும், புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 23 பேரும், தொண்டி நம்புதளையை சேர்ந்த 11 பேரும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 94 மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 94 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதி வந்தார்.
இந்நிலையில், இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார்.
அதன்படி, அனுராதபுரம் சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரும் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் 74 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது இலங்கை கடற்படை. இந்த 94 மீனவர்களில் 74 பேர் காரைக்காலில் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், 20 மீனவர்கள் மண்டபத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.
மீட்டுக் கொண்டுவரும்போது தமிழக மீனவர்களுக்கு உணவு, முதலுதவி சிகிச்சை போன்ற தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு மட்டும் இந்திய கடலோர காவல் படை 930 இந்திய மீனவர்களையும், 159 மீன்பிடி படகுகளையும் மீட்டு வந்து இருப்பதாக கடலோர காவல் படை கிழக்கு மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.