போதும்மா.. ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகளால் ஆட்டம் காணும் தமிழக அரசு நிர்வாகம்!
உயர் பதவியில் இருந்தவர்கள் அதிலும் முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்த மூத்த அதிகாரிகள் திடீரென ஓட்டம் பிடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு சசிகலா முதல்வராக போவது தெரிந்துவிட்டதுதான்.
சென்னை: தமிழக அரசை வழிநடத்தி செல்வதில், முக்கிய பங்கு வகித்த, அரசு ஆலோசகர், முதல்வர் அலுவலக செயலர்கள், திடீரென பணிகளில் இருந்து ராஜினாமா செய்து ஓடுவது தமிழக ஆட்சி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், 2014 மார்ச், 31ல் பணி ஓய்வு பெற்றார். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவருக்கு, அரசு ஆலோசகர் பதவி வழங்கினார்.
அரசு கோப்புகள்,அவரின் ஒப்புதலுக்கு பின்னரே, முதல்வர் கையெழுத்திற்கு சென்றன. அதே போல், ஐ.ஏ.எஸ், அதிகாரி வெங்கட ரமணன், 2012 ஏப்ரல் 30ல் ஓய்வு பெற்றார். அவரும், முதல்வர் அலுவலகத்தில், செயலராக பணியாற்றி வந்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கமும், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றி வந்தார்.
அதே பணி
இவர்கள் மூன்று பேரும், கடந்த ஆட்சியில் இருந்து, முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, முதல்வர் அலுவலக செயலராக இருந்த ராமமோகன ராவ், தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட ரமணன், ராமலிங்கம் ஆகியோர், அதே பணி யில் தொடர்ந்தனர்.
திடீர் விலகல்கள்
முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகும், அவரது ஆலோசகராக ஷீலாவும், முதல்வரின் செயலர்களாக, வெங்கடரமணன், ராமலிங்கமும் தொடர்ந்தனர். இவர்களில், ஷீலா பாலகிருஷ்ணன் பதவிக்காலம், மார்ச் மாதம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், இரு தினங்கள் முன்பு, அரசு ஆலோசகர் பதவியில் ஷீலா பாலகிருஷ்ணன் விலகினார். வெங்கடரமணன், திடீர் விடுப்பில் சென்றார். ராமலிங்கம், முதல்வர் அலுவலக செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தகவல் வெளியானது.
முதல்வரின் சிறப்பு அதிகாரி
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் அவரது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதாக சாந்தா ஷீலா நாயர் விளக்கம் அளித்திருக்கிறார்.
சசிகலா முதல்வராவதால் ஓட்டம்?
ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் அதிலும் முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்த மூத்த அதிகாரிகள் திடீரென ஓட்டம் பிடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு சசிகலா முதல்வராக போவது தெரிந்துவிட்டதுதான் என்று கூறப்படுகிறது. நிர்வாக அனுபவம் கொண்ட, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகளால், சசிகலாவுடன் எப்படி பணியாற்றுவது என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் அலுவலகம் ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் அதிகாரிகளும் சேர்ந்து சிக்க வேண்டும் என்ற அச்சமும் அதிகாரிகள் பலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநரும் எஸ்கேப்
இதனிடையே ஆளுநர் வித்யாசாகர் ராவ் திடீரென உதகையிலிருந்து டெல்லி சென்றார். அங்கிருந்து மும்பை சென்றுவிட்டார். இதனால் இன்று சசிகலாவால் முதல்வராக பதவியேற்க முடியவில்லை. அதிகாரிகள் ஒருபக்கம் ஓட்டம், ஆளுநர் எஸ்கேப் என சசிகலா முதல்வராகபோகும் நேரத்தில் நடைபெறும் இந்த குளறுபடிகளால் தமிழக ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் காபந்து முதல்வராக இருப்பதால் முக்கிய திட்டங்கள் எதையும் அவர் முன்நகர்த்தப்போவதில்லை. சசிகலா முதல்வரானாலும் நிர்வாகம் பற்றி அறிய பல நாட்கள் பிடிக்கும் என்பதால் தமிழக ஆட்சி நிர்வாகம் அம்பேலமாக போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
நிர்வாகம்
ஏற்கனவே ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் எந்த ஒரு முக்கிய திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. தினசரி நிகழ்வுகளை அதிகாரிகள்தான் கவனித்தனர். முதல்வர் துறையை கவனித்த பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும் அப்பல்லோவில் குவிந்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வரானதும் ஆட்சி நிர்வாகம் அதிரடியாக ஓடத்தொடங்கியது. ஆனால் தமிழக மக்களின் துரதிருஷ்டம். தொடக்கத்திலேயே அந்த நிர்வாக குதிரையின் கால்கள் முடமாக்கப்பட்டுள்ளன.