17 விவசாயிகள் சாவுக்குத்தான் நிவாரணம்.. வறட்சியால் இறந்த மற்ற விவசாய குடும்பங்கள் கலக்கம்
வறட்சியால் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசு 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத வகையில் விவசாயம் பொய்த்து போனதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து போனதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு மாநிலத்தின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கை இன்று முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதே நேரம், இதுவரை 17 விவசாயிகள்தான் வறட்சி தொடர்பான பாதிப்பால் இறந்துள்ளதாக இன்று முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 பேர் குடும்பங்கள்
"கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஊடக செய்தி
ஆனால் ஊடகங்களின் செய்திகள் அடிப்படையில் இதுவரை தற்கொலை, மாரடைப்பு என்ற வகையில் வறட்சியால் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. அப்படியானால் மற்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சருக்கு எதிர்ப்பு
மற்ற விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை என்று தமிழக அரசு கூற முற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் நிவாரணத்தை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூட இதே கருத்தை தெரிவித்திருந்தார். இறந்தவர்கள் பலரும் பல்வேறு நோய்களால் இறந்திருப்பார்கள் என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஆறுதல் வார்த்தை
இந்நிலையில், மாநில அரசு பிற விவசாயிகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியிடாதது அந்த விவசாய குடும்பங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், ஆறுதலாக அரசு கடைசியில் ஒரு வரியை அறிக்கையில் சேர்த்துள்ளது. அந்த வரிகள் இவைதான், "வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன. இது பற்றி விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்றபின், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தக்க நிவாரண உதவி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார் முதல்வர்.
மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையளித்த பிறகு கூடுதல் விவசாயிகளுக்கு நிவாரணம் போய் சேருமா இல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications