தமிழகத்தில் அதிக விலைக்கு வெளிநாட்டவருக்கு விற்கப்படும் உடல் உறுப்புகள்... அதிர வைக்கும் ரிப்போர்ட்
Recommended Video

சென்னை: கேரள இளைஞர் மணிகண்டனின் உடல் உறுப்புகளை திருடியது குறித்து தமிழக முதல்வருக்கு கேரள அரசு எழுதிய கடிதத்தை அடுத்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவர் கள்ளக்குறிச்சி அருகே வாகனத்தில் சென்ற போது கடந்த மே 18-ஆம் தேதி விபத்தில் சிக்கினார்.
இதையடுத்து சேலத்தில் உள்ள மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக தர உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து அவரது உடல்உறுப்புகள் சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் உடல்உறுப்புகள் திருடப்பட்டு விதிகளை மீறி வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனின் உறுப்புகள் திருடப்பட்டதை உணர்ந்த உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதில் உடல் உறுப்பு மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர்கள், சென்னை மற்றும் சேலம் மருத்துவமனைகளில் விசாரணை நடைபெற்றது.
இதில் ஒருவருக்கு தானமாக கொடுப்பதாக கூறிவிட்டு அந்த உறுப்பை வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு தானமாக பொருத்தியது தெரியவந்தது. அதுபோல் இதயத்தையும் உக்ரைன் நாட்டினருக்கு கொடுப்பதாக கணக்கு காட்டிவிட்டு லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
நுரையீரலை தானமாக பெற உள்நாட்டை சேர்ந்த 5 நோயாளிகள் இருக்கும் போது அதை இஸ்ரேல் நாட்டவருக்கு பொருத்தியுள்ளனர். மேலும் தானமாக பெறப்பட்டதற்காக பராமரிக்கப்படும் பதிவேட்டில் எந்த வித குறிப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
மணிகண்டன் விவகாரம் மட்டுமல்லாமல் இதுபோல் வெளிநாடுகளுக்கு உறுப்புகள் தானமாக பொருத்தப்பட்டது தொடர்பான மோசடிகள் குறித்த அறிக்கையை அந்த குழு இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications