மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம்
மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழக அரசு 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பதவியிடமாற்றம் போன்றவற்றுக்கு உள்ளாக்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
ஐஜியாக பதவி உயர்வு பெறும் எஸ்.மனோகரன், திருப்பூர் சிட்டி போலீஸ் கமிஷனராக, இப்போது அப்பதவியில் உள்ள நாகராஜனுக்கு பதிலாக நியமிக்கப்படுகிறார்.
ஐஜியாக பதவி உயர்வு பெறும் ஜே.பாஸ்கரன், காலியாக உள்ள, சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவில் ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
— Oneindia Tamil (@thatsTamil) June 9, 2018
சென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் ஐஜியாக உள்ள சண்முக ராஜேஸ்வரனுக்கு பதிலாக அப்பதவிக்ககு, திருப்பூர் கமிஷனராக இருந்த நாகராஜன் நியமிக்கப்படுகிறார்.
தென் மண்டல போலீஸ் ஐஜியாக பதவி வகித்து வரும் சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், சண்முகராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
காவல்துறை நலப்பிரிவு ஐஜியாக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், மதுரை சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். இப்போது மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள மகேஷ்குமார் அகர்வால், சென்னை சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்படுகிறார். இதுவரை அந்த பதவி காலியாக இருந்து வந்தது.
சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாயி, காவல்துறை நலப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.
சென்னை குற்றப்பிரிவில் ஐஜியாக பணியாற்றிய பாஸ்கரன், சென்னையிலுள்ள, தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு பணியமர்த்தப்படுகிறார்.
சென்னையில் காவலர் தொழில்நுட்ப பிரிவு பிரிவில் டிஐஜி கேடரில் பணியாற்றிய டாக்டர்.மகேந்தர் குமார் ரத்தோட், திருநெல்வேலி சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்படுகிறார். அவர் தற்போது சென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் பணியாற்றி வருகிறார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 13 பொதுமக்களை கொன்ற நிலையில், தென்மண்டல ஐஜி மாற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.