தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? .. உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து வரும் திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அவசர கதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டின.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தவில்லை என்றும் எஸ்டி பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் இதனால் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்து ஆணையிட்டார்.அரசியல் உள்நோக்கத்துடன் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணைகள் வெளியிடப்பட்டிருப்பதாக கூறி 3 அரசாணைகளையும் ரத்து செய்தார்.
மேலும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரன் தேர்தலுக்காக புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினார். இதுகுறித்து திங்கள் கிழமை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் ஆணையிட்டார்.