சென்னையை வெளுத்த மழைக்குத் தப்பாத ரிப்பன் மாளிகை.. கட்சிகளின் அலுவலகங்கள்!
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அரசியல் தலைவர்களின் அலுவலகங்கள், இல்லங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தொடங்கிய மழை விடாமல் நள்ளிரவையும் தாண்டி வெளுத்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள், பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள். மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையிலும் மழையின் தாக்கம் குறையாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் மழை நீர் புகுந்துள்ளது. இதனையறிந்த அதிகாரிகள் தற்போது அங்கு விரைந்து சென்று மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல, சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. அலுவலகம் மட்டுமின்றி அவ்வை சண்முகம் சாலை முழுவதும் இரண்டு அடி வரை மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை நீர் வடிய வழி இல்லாததால் அதிகாரிகள் செய்வதறியாது ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதே பகுதியில் குழந்தைகள் நல மருத்துவமனை இருப்பதால், மாநகராட்சி பணியாளர்கள் கொட்டும் மழையிலும் மின்மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றி வருகிறார்கள்.
மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
மொத்த சென்னையில் கன மழையால் ஸ்தம்பித்துப் போய் விட்டது. மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications