ஓ.பி.எஸ்., தீபா, தீபக்.. ஜெயலலிதா பிறந்த நாளான இன்று காத்திருக்கிறது அரசியல் புயல்
இன்று பன்னீர்செல்வம் முடிவு என்னவாகும், தீபக் இன்று என்ன சொல்வார், தீபா என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை மையம் கொண்டு அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியதை போல, இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்வைத்து தமிழகத்தில் அரசியல் புயல்கள் பல மையம் கொள்ள உள்ளன.
தனது அத்தையான ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று மாலை 6 மணிக்கு தனது புதிய அரசியல் அமைப்பை தீபா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியை சசிகலா தரப்பு கபளீகரம் செய்துவிட்டதாக கோபத்திலுள்ள பன்னீர்செல்வம், இன்று முதல் மாநிலம் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளார். நீதி கேட்டு அவர் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், தீபக் நேற்று, திடீரென ஒரு தொலைக்காட்சி சேனலை அணுகி, தன்னை பேட்டியெடுக்க கோரியுள்ளார். அதில், அதிமுக துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பேட்டிகொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணன் என அழைத்தார். தினகரனை கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்றார்.
தீபாவுடன் தனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தீபக் தெரிவித்தார். இதுவரை அவர் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது அவரது பேச்சு. பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து செல்வது அதிமுகவை அழித்துவிடும் என்பதால் தீபக்கை சசிகலா தூதுவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரும், பன்னீர்செல்வத்திற்கு வலைவீசி பார்க்கிறார்.
எனவே இன்று பன்னீர்செல்வம் முடிவு என்னவாகும், தீபக் இன்று என்ன சொல்வார், தீபா என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications