சசிகலா புஷ்பா லேட்டஸ்ட்தான்.. தமிழக அரசியல் கடந்துவந்த அடிதடிகள், பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
சென்னை: தன்னை முதல்வர் ஜெயலலிதா கன்னத்தில் அறைந்தார் என்று ராஜ்யசபாவில், அழுது புலம்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா.
இந்த புகாருக்கு பிறகு, ஜெயலலிதா உடனடியாக சசிகலா புஷ்பாவின் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியை கூட பறித்துவிட்டார்.
ஜெயலலிதாவுடன், நேற்று சசிகலா புஷ்பா சந்தித்திதிருந்தார். அப்போது திருச்சி சிவாவை அடித்தது குறித்து ஜெயலலிதா விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போதே, எம்.பி பதவியை ராஜினாமா செய்யவும் ஜெயலலிதா உத்தரவிட்டதாக தெரிகிறது.
வழக்கு தொடர முடியாது
ஆனால், எம்.பி பதவியை துறக்க மறுத்த சசிகலா புஷ்பா, மனதுக்குள்ளேயே சம்பவங்களை பூட்டி வைத்து, நாடாளுமன்றத்தில் வைத்து உடைத்துள்ளார். சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தின் அவைக்குள் வைத்து இந்த புகாரை கூற காரணம், இது தேசிய கவனத்தை பெறும் என்பதும், அவைக்குள் பேசுவதற்காக யாரும் கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது என்பதும்தான்.
அடிதடி புகார்கள்
சிவாவை, சசிகலா அடித்ததும், ஜெயலலிதா தன்னை அடித்ததாக சசிகலா புகார் கூறியதும் என.. அடுத்தடுத்து அல்லோகலப்பட்டுள்ளது தமிழக அரசியல். தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளன.
வழக்கம்தான்
அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசின், அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில் திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கருணாநிதி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தள்ளிவிடப்பட்ட ஜெயலலிதா
1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆர். உடலை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்தில் ஏற முயன்ற ஜெயலலிதாவை கீழே பிடித்துத் தள்ள பெரும் சர்ச்சை வெடித்தது.
போர்க்களம்
1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தமிழக சட்டசபை வரலாறு காணாத கலவரத்தை எதிர்கொண்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அமளி ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது. மைக்குள் பறந்தன.
தலைவிரி கோலத்தில் ஜெயலலிதா
அந்த களேபரத்தின் போதுதான் திமுகவினர் தன்னை தாக்க முயன்றதாக தலைவரி கோலத்துடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் ஜெயலலிதா. அத்துடன் அப்போது, நான் முதல்வராகத்தான் இந்த சட்டசபைக்கு திரும்புவேன்.. அதுவரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவது இல்லை என்று சபதம் எடுத்தார்.
வைகோ மீது பரபரப்பு குற்றச்சாட்டு
1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்' என்று ஒரு கருணாநிதி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் மதிமுக பிறக்க இக்குற்றச்சாட்டு பிள்ளையார் சுழி போட்டது.
ஆடிட்டர் புகார்
ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த ராஜசேகர், கடந்த 1999ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து தாக்கப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தன்னை ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் தாக்கியதாக தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் செய்தார். இந்த வழக்கில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விஜயகாந்த்துக்கு வழக்கம்
கடந்த ஆண்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்துவை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார். பிறகு விஜயகாந்த் போகுமிடமெல்லாம் சர்ச்சைகளை ஏற்படுத்தியதும் நீங்கள் அறிந்ததே.