காந்தியை வேட்டி கட்ட வைத்த தமிழகத்தில் வேட்டிக்கு தடையா? குமரி அனந்தன் கொந்தளிப்பு
சென்னை: காந்தி என்றாலே மனதில் உருவாகக்கூடிய பிம்பத் தோற்றத்தை உருவாக்கியதே வேட்டிதான், அதையும் தமிழகம்தான் முடிவு செய்தது. அதுபோன்ற ஒரு வேட்டியை தமிழகத்திலேயே உடுக்க தடை விதிப்பதா என்று குமரி அனந்தன் கேள்வி எழுப்பிள்ளார். சென்னை கிரிக்கெட் கிளப், வேட்டி அணிந்து வந்த நீதிபதி மற்றும் வக்கீல்களை உள்ளே அனுமதிக்காததால் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் குமரி அனந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஆடையை வீணடித்த மன்னர்
காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: அண்ணல் காந்தி லண்டனில் ஜார்ஜ் மன்னரைப் பார்க்க வேட்டி, துண்டோடு சென்றார். ஒருவர் அதைப் பற்றி கேட்டபோது, "இருவருக்கும் சேர்த்தே போதுமான உடையணிந்திருந்தார் மன்னர்" என்று புன்னகைத்துப் பதில் அளித்தார் காந்தி.
கேலிக்கு ஆளான காந்தி
வேட்டி மட்டுமே கட்டிய அரை நிர்வாண கோலத்தை கிண்டல் செய்வது போல், ஆங்கில நாட்டின் பிரதமர் சர்ச்சில், காந்தியை, "அரை நிர்வாணப் பக்கிரி" என்று கூறினார்.
ரத்தத்தை தாங்கிய வேட்டி
தமிழ்நாட்டில் மதுரையில் காந்தி மேற்கொண்ட ஆடை புரட்சியே உலகெங்கும் காந்தியடிகளை அடையாளங் காட்டியது. கொடியவனின் குண்டுக்கு இரையாகும் போது காந்தி அணிந்திருந்த கதர் வேட்டி ரத்தம் தோய்ந்து செந்நிறத்தோடு இன்னும் மதுரை காந்தி அருங்காட்சியத்தில் இருக்கிறது.
திருக்கோலத்தை உருவாக்கியவர்களுக்கு அலங்கோலம்
காந்தியின் திருக்கோலத்தை நிர்ணயித்ததே தமிழ்நாடு தான். அந்த தமிழ்நாட்டில் தான் வேட்டி கட்டிய நீதிபதியும், மூத்த வழக்கறிஞர்களும் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த அமைப்பினர் தடுத்ததை நியாயப்படுத்தி அறிக்கை வேறு வெளியிட்டுள்ளார்கள். அந்த அமைப்பினர் (கிரிக்கெட் கிளப்) தம் தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். இவ்வாறு குமரிஅனந்தன் கூறியுள்ளார்.
மனதை மாற்றிய மதுரை
1921ம் ஆண்டு மதுரைக்கு வந்த காந்தி அங்குள்ள விவசாயிகள் வேட்டியை மட்டுமே அணிந்து மேலே சட்டை போடாததை பார்த்து, உடை குறைப்பை அவரும் ஏற்றுக்கொண்டார். மேலாடையை ஆண்கள் தவிர்ப்பதன் மூலம் கூடுதலாக ஒரு நபருக்கு ஆடை கிடைக்கும் என்று காந்தி நினைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.