கடலில் எல்லை தாண்டுவது தமிழன் என்பதில்தான் பிரச்சினை - சீமான் குற்றச்சாட்டு
கடலில் எல்லை தாண்டுவது தொடர்பாக தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் : தமிழர்கள் மட்டுமே உலகம் முழுவதும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலில் எல்லை தாண்டும் தமிழர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராடி வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தங்கச்சி மடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பிரிட்ஜோவின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், மீனவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் எல்லை தாண்டும் மீனவர்கள் யார் என்பதில் பிரச்சினையில்லை என்றும் தமிழன் என்பதால்தான் கைது செய்யப்படுகின்றனர், சுடப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாவதாகவும், அதை தட்டிக்கேட்க சரியான அரசு இல்லை என்றும் சீமான் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். அதிகாரம் தங்கள் கைகளுக்கு வரும் போது தட்டிக்கேட்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.
சிலை கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டால் தொழிலதிபர் என்று கூறும் ஊடகங்கள், வயிற்று பிழைப்புக்காக மரம் வெட்டுபவர்களை கடத்தல்காரர்கள் என்று எழுதுவதாக குற்றம் சாட்டினார்.