நான் சீட் கேட்டேனா... நீக்கப்பட்ட ஆலங்குடி நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி கேள்வி
புதுக்கோட்டை: தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறி உங்களிடம் வந்து சீட் கேட்டானா என ஆலங்குடி தொகுதி வேட்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.தமிழ்செல்வி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மு. தமிழ்செல்வி போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் சீமான் அறிவித்தார். இதையடுத்து தமிழ்செல்வி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கத் துவங்கினார்.
இந்நிலையில் வேட்பாளர் பொறுப்பில் இருந்து தமிழ்செல்வியை நீக்குவதாக சீமான் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடித் தொகுதி மு.தமிழ்ச்செல்வி எனும் தாங்கள், பொறுப்பாளர்களுடன் சரியாகச் செயல்பட்டு பயணிக்க முடியாத காரணத்தாலும், கட்சி பெருங்கனவுகளுடன் நீண்ட பெரும்பயணம் செல்ல வேண்டி இருப்பதாலும், தங்களை வேட்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ததை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதோடு அந்தப் பொறுப்பை மீளப் பெற்றுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தமிழ்செல்வி பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,
நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்னு உங்களிடம்(சீமான்) வந்து விருப்ப மனு அளித்தேனா? நீங்களா என்னை வேட்பாளராக்கினீர்கள். அதன் பிறகு நான் இயக்க தோழர்களுடன் தேர்தல் பணிகளை செய்து வந்தேன்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கையில் என்னிடம் விளக்கம் எதுவும் கேட்காமலேயே என்ன வேட்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கிட்டீங்க. எதற்காக நீக்கினீங்க? இதற்கு அண்ணன் சீமான் தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications