மீத்தேன் திட்டத்துக்கு எதிராக உதயமான 'தமிழர் விடியல் கட்சி'.. மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்!
தஞ்சை: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவிருக்கும் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை எதிர்ப்பதற்காகவே தமிழர் விடியல் கட்சி என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது.
மா.டைசன், உ இளமாறன் ஆகியோர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.
இக் கட்சியின் கொடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருட்டிணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழர் விடியல் கட்சியின் முதல் போராட்டம், காவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பனகல் கட்டிடம், பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, மே பதினேழு இயக்கம், பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் ஆகியவை இப் போராட்டத்தில் பங்கேற்றன.
தொடர்ந்து மக்களுக்கு எதிரான மற்ற அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடி தடுத்து நிறுத்துவோம் என்று "தமிழர் விடியல் கட்சி" உறுதி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மக்கள் விரோத திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நியூட்ரினோ திட்டம் என பல அழிவு திட்டங்கள், வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தை முற்றுகையிடுகின்றன. காவேரி டெல்டா மாவட்டங்களை அழித்து மீத்தேன் வாயுவும், நிலக்கரி எடுக்கும் "மீத்தேன் திட்டமும்" அப்படியானதொரு அழிவுத் திட்டமே.
நீர், நிலம், காற்று என ஒட்டுமொத்த உயிர் சூழலையும் அழித்து வரக் கூடிய இத்திட்டம் தமிழர்களுக்கு பேராபத்தை உண்டு பண்ணக் காத்திருக்கிறது. உலகம் முழுக்க மீத்தேன் எடுக்கும் திட்டங்களை எதிர்த்து அந்தந்த நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
பல நாடுகளில் அரசுகள் பணிந்த நிலையில் இருக்கின்றன. ஆனால் இந்திய அரசு தமிழர்கள் மீது வஞ்சம் கொண்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை டெல்டா மாவட்டங்களை அழிக்க இத்திட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அரசு பெரு முதலாளிகளுக்கானதாக இருக்கிறது, மக்கள் விரோத அரசாக இருக்கிறது.
இந்த அரசை எதிர்கொண்டு மீத்தேன் திட்டத்தை தடுக்கும் பொறுப்பு தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் உண்டு.
அந்த வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை காக்க தோழமை இயக்கங்களையும், மக்களையும் திரட்டி "தமிழர் விடியல் கட்சி" தொடர்ந்து போராட்டம் நடத்தும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.