மகாத்மாவுடன் இணைந்து விட்டார் வாஜ்பாய்.. ஒன்இந்தியாவுக்கு தமிழிசை பேட்டி
வாஜ்பாய் நாட்டுக்கு செய்த சேவையை நாம் மறக்க முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: வாழும் மகாத்மா என்று அழைத்த வாஜ்பாய், கடைசியில் அந்த மகாத்மாவோடே இணைந்துவிட்டதை என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை என்று தமிழிசை சவுந்தராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒன் இந்தியாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய வருத்தம் நிறைந்த வார்த்தைகள் இதோ:
"வாழும் மகாத்மா என்று அன்போடு நாங்கள் அழைத்து கொண்டிருந்த வாஜ்பாய், இன்று மகாத்மாவோடே இணைந்து விட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற விஷயத்தையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வளர்ச்சியின் நாயகனாக அவர் திகழ்ந்து கொண்டிருந்தார். இன்று அவர் இல்லை என்றாலும் நாமெல்லாம் நமது வாகனத்தை ஓட்டும்போது, நிச்சயமாக அந்த மாமனிதர் நம் நினைவுக்கு வருவார். அது மட்டுமல்ல இலங்கை தமிழர் பிரச்சனையை அவர் எந்த அளவுக்கு இதமாக கையாண்டு எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் என்பது நாமெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கார்கில் போரை வெற்றி கொண்டார். பொக்ரான் வெடிகுண்டை வெடித்து அணுசக்தி நாடாக இந்த நாட்டை முன்னிறுத்தினார். இதையெல்லாம் செய்த ஒரு மாமனிதரை நாம் இழந்திருக்கிறோம். மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருப்பதும், வளர்ச்சியை நோக்கியுள்ள அரசியல்வாதியாக இருப்பதுமே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி."
இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் வாஜ்பாய்க்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.