கூட்டணிக் கட்சியினருக்கு தொடர்ந்து விருந்து கொடுத்து அசத்தும் வைகோ
நெல்லை: பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று (11.4.2014) காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு சென்று அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.
தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாருக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜன் இன்று சங்கரன்கோவிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு வரவேற்பளித்த வைகோ கலிங்கபட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலை சிற்றுண்டி அளித்து உபசரித்தார்.

கேசரி, அல்வா
காலை விருந்தில் கேசரி, அல்வா, வடை, இடியாப்பம் தேங்காய் பால், கார இடியாப்பம், குழிப்பணியாரம், ஊத்தப்பம், பில்டர் காபி. ஆகியவை பரிமாறப்பட்டது அவற்றை தமிழிசை ருசித்து சாப்பிட்டார்.

தாயாரிடம் ஆசி
அதன் பிறகு வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் ஆசிபெற்றார். தொடர்ந்து கலிங்கப்பட்டியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினார் தமிழிசை சவுந்தரராஜன்.

வைகோ சகோதரர்
எனக்கு வைகோதான் சகோதரர், எனது குடும்பத்தில் நால்வருமே மருத்துவர்கள். கலிங்கபட்டியில் வந்து மருத்துவ சேவை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
அப்போது தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் சதன் திருமலைக்குமார், வாழும் கலை அமைப்பின் கணேஷ்ஜி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வை.இரவிச்சந்தின், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன், மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

கூட்டணிக் கட்சித்தலைவர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கலிங்கபட்டியில் விருந்தளித்தார் வைகோ. இன்றைய தினம் பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருந்தளித்து கூட்டணி ஒற்றுமையை பலப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications