அதிமுகவினர் அராஜகம், ஸ்ரீரங்கம் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், ஆளும் கட்சியினர் அராஜகமாக செயல்படுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைதியான முறையில் அனுமதி பெற்று பிரசாரம் மேற்கொண்டிருந்த எங்களது வேட்பாளர் சுப்பிரமணியன், அவரோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், எங்களது கூட்டணி கட்சியான தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மீது காயம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதாகவும், அடிதடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தேர்தல் ஆணையம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பே ஸ்ரீரங்கத்தில் பணப்பட்டுவாடா, ஆடைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டது. எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குதிரை ஓடிய பின்பு லாயத்தை பூட்டுவது போலத்தான் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அங்கொன்றும், இங்கொன்றுமான கண்துடைப்பாக தெரிகிறதே தவிர, ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை முழுவதுமாக துடைப்பாக தெரியவில்லை.
வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் மனநிலையை பெற்றுவிடக்கூடாது என்பதில், அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகள் குறியாக இருக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எவ்வளவு பணம் கொடுத்திருந்தாலும், வாக்காளர்களின் மனம் அதற்கு அசைந்துக்கொடுக்காமல் ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் போட்டியிடும் பா.ஜ.க. பக்கமே இருக்கிறது என்ற பயத்தில் பா.ஜ.க. வினர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பணநாயகம்தான் உள்ளது, ஜனநாயகம் இல்லை. திருப்தியான வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாவிட்டால், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாவிட்டால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications