பொங்கலன்று ஊரில் இல்லையா, கரண்ட் பில் கட்டலையா?.. ஜன. 19, 20 தேதியில் கட்டலாம்!
சென்னை: பொங்கல் தின சமயத்தில் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் போனவர்களின் வசதிக்காக ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மின் கட்டணத்தை செலுத்த மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 15 முதல் 17 வரை அரசு விடுமுறை தினங்களாகும். இதனால் இந்த சமயத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வந்தவர்கள் குழம்பிப் போய் விட்டனர். வழக்கமாக இதுபோல கடைசி நாள் விடுமுறை தினத்தில் வந்தால் கூடுதல் அவகாசம் தரப்படுவது வழக்கம்.
அதன்படி 15, 16, 17 தேதிகளில் மின்கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தமிழக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்ததால் மின்வாரியம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளையும் (19ம் தேதி) 20ம் தேதியும் இவர்கள் மின் கட்டணத்தை அபராதத் தொகை இன்றி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.