தமிழுக்கு குரல் தரும் உத்தரகாண்ட் எம்.பி தருண் விஜய்க்கு வைரமுத்து பாராட்டு விழா!
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.பியான தருண் விஜய்க்கு பாராட்டு விழா ஒன்றினை கவிஞர் வைரமுத்து சென்னையில் நாளை ஏற்பாடு செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தருண் விஜய் எம்.பி. இந்தியை தாய் மொழியாக கொண்டவர்.
ஆனால் இந்தியாவின் சிறந்த செவ்வியல் மொழியான தமிழுக்கு இன்னும் உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் தருண் விஜய் எம்.பி குரல் எழுப்பி வருகிறார்.
திருவள்ளுவர் பிறந்தநாளை இந்திய மொழிகளின் திருநாளாக கொண்டாடவேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்கவேண்டும்.
இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவரவேண்டும், பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருண் விஜய் போராடி வருகிறார்.
தமிழுக்காக போராடி வரும் தருண் விஜயை, தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டு விழா நடத்த கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கான விழா நாளை மாலை 6 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கவிஞர் வைரமுத்துவை நிறுவனர், தலைவராக கொண்ட வெற்றித் தமிழர் பேரவை செய்து வருகிறது.