போகி, பொங்கலுக்கு 'சரக்கு' உண்டு... 16ம் தேதி மட்டும்தான் டாஸ்மாக் கடைகளுக்கு லீவாம்!!
சென்னை: புத்தாண்டு விற்பனையில் பெரும் லாபம் பார்த்து விட்ட டாஸ்மாக் நிர்வாகம், அடுத்து தமிழர் திருநாளாம் பொங்கலுக்குக் குறி வைத்துள்ளது. இந்த பொங்கல் பண்டிகையின்போது மிகப் பெரிய அளவில் வருமானம் பார்க்கும் நோக்குடன் ஒரே ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அரசு.
தமிழர்களின் பெரும் விழாக்களில் ஒன்றான பொங்கல் திருவிழா வரும் 14ம் தேதி போகி பண்டிகையோடு தொடங்குகிறது. 15ம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்படும். 16ம் தேதி மாட்டுப் பொங்கலாகும். இதே நாளில்தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாளான 17ம் தேதி காணும் பொங்கல் விழா வருகிறது.

இந்த நாட்களின்போது மக்கள் விடுமுறையில் இருப்பார்கள். உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவர். பல்வேறு ஊர்களுக்குச் செல்வார்கள். இந்த உற்சாகத்தைப் பயன்படுத்தி உற்சாக பானங்களை பெருமளவில் விற்று வருமானம் பார்க்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று மட்டும் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடுவது எனவும், மற்ற நேரங்களில் கடைகளைத் திறந்து மது விற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதுவும் மற்ற தினங்களில் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் கடைகளுக்கு ரகசிய உத்தரவு போயுள்ளதாம். கடந்த ஆண்டை விட அதிக அளவில் இந்த வருடம் மது விற்பனை இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இதனால் குடிகாரர்கள் பெரும் சந்தோஷமடைந்துள்ளனர். 16ம் தேதியைத் தவிர முன்னும் பின்னும் கடைகள் இருக்கும் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் உள்ளனர். அதேசமயம், மதுக் கொடுமைக்கு எதிராக போராடி வருபவர்கள்தான் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications