”என் சாவுக்கு யாரும் காரணமல்ல” – கடிதம் எழுதி வைத்து விட்டு டாஸ்மாக் ஊழியர் மனைவி தற்கொலை
இடைப்பாடி: சேலத்தில் டாஸ்மாக் சூப்பர்வைஸர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவுக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இளம்பிள்ளை பகுதியில் உள்ள அரசு மதுபான கழகத்திற்கு சொந்தமான டாஸ்மாக் கடையின் சூப்பர்வைஸராக இருப்பவர் ராஜா .
திருமணமாகி எட்டு வருடங்கள்:
இவரது மனைவி புவனேஸ்வரி 28. இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மனோஜ், துர்கேஷ் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பூட்டியிருந்த வீடு:
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பாட்டிற்காக வீட்டிற்கு திரும்பினார். வீடு உள்தாழிட்டு பூட்டியிருந்தது. பலமுறை கதவை தட்டிய ராஜா பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.
தூக்குப் போட்டு தற்கொலை:
அப்போது அவரது மனைவி புவனேஸ்வரி தன்னுடைய சுடிதாரின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை:
அதிர்ச்சியடைந்த ராஜா மகுடஞ்சாவடி போலீஸில் புகார் கொடுத்தார்.
புவனேஸ்வரி உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவுக்கு யாரும் காரணமல்ல:
மேலும் புவனேஸ்வரி தூக்கிட்டு இறக்கும் முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் "என் மகன்கள் இரண்டு பேரையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள இருவருக்கு கடன் கொடுத்துள்ளேன். அதனை வசூல் செய்து கொள்ளவும். மேலும் என் சாவுக்கு யாரும் காரணமல்ல" என எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்:
புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீஸார் புவனேஸ்வரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.