பாதுகாப்பு கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆங்காங்கு கடைகள் மீது தாக்குதலும் நடைபெறுகிறது. சேலத்தில் நடந்த தாக்குதலில் உயிரோடு ஒரு ஊழியர் எரித்துக் கொல்லப்பட்டார்.
அதேபோல சென்னை தி.நகரில் ஒரு டாஸ்மாக் கடை தீவைத்து எரிக்கப்பட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்
போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.