‘பலாத்காரம் செய்யப்பட்ட சென்னை’... சர்ச்சையில் சிக்கிய வெள்ள பாதிப்பு டாக்குமெண்டரி தலைப்பு!
சென்னை: வெள்ளப் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படம் ஒன்று தலைப்பினால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இம்மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. வீட்டில் இருந்த பொருட்களை இழந்து, தொழில்களை இழந்து என பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டது.
தற்போது தான் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
ஆவணப்படம்...
இந்நிலையில், சென்னை வெள்ளப் பாதிப்பு குறித்து மெட்ராஸ் சென்ட்ரல் குழுவினர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அதற்கு சென்னை ரேப்டு ( Chennai raped) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய தலைப்பு...
சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளத்துக்கான காரணங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு பாலியல் பலாத்காரம் என்பதைக் குறிக்கும் வகையில் இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை...
பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் படக் குழுவினர் இத்தகைய தலைப்பை கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.
குருதிச் சிதறல்களுடன்....
அதோடு ஆவணப்படத்தின் தலைப்பைக் காட்டும் போது 'Raped' என்ற வார்த்தை குருதிச்சிதறல்களுடன் காண்பிக்கப்படுகிறது. இது பெண்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாகக் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தலைப்பை மாற்ற கோரிக்கை...
டிசம்பர் 17-ம் தேதி இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஆவணப் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மறுப்பு...
ஆனால் தலைப்பை மாற்ற படத்தயாரிப்பு குழுவினர் மறுத்துள்ளனர். அதிகளவில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக இத்தகைய தலைப்பு பயன்படுத்தப் பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சிலரும் விமர்சித்துள்ளனர்.
தலைப்பு சர்ச்சை...
மேலும், தாய் மண்ணான சென்னைக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை விளக்குவதற்காகவே இந்தத் தலைப்பு வைக்கப் பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர். ஆனால், படம் என்ன சொல்ல வருகிறது என்பதிலிருந்து கவனம் தலைப்புச் சர்ச்சை பக்கம் திரும்பியது துரதிர்ஷ்டமே என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.