10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்… ஆசிரியர் கைது
சென்னை: 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 40 வயது ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து யூனியன் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் 40 வயதான சீனிவாசன்.
கடந்த 20ம் தேதி, வகுப்பறையில் இருந்து சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற சீனிவாசன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும், இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் சிறுமி தன்னுடன் படிப்பவர்களிடமும், பெற்றோர்களிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் மூடி மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறுமி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவரிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதை உறுதிபடுத்தினர். அதிர்ந்து போன பெற்றோர், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.