உடம்பெல்லாம் நடுங்கிப் போனது - நீராவி முருகனிடம் சிக்கி மீண்ட ஆசிரியை பேட்டி
சென்னை: ரவுடி நீராவி முருகனிடம் சிக்கி மயிரிழையில் மீண்ட ஆசிரியை வேலம், தனக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ஆசிரியை வேலம் என்பவரை வழியில் மடக்கி கத்தியைக் காட்டி இரண்டு பேர் 10 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் வாட்ஸ் ஆப் மூலமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துணிகர திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்களின் தீவிர விசாரணையில் ரவுடி நீராவி முருகன் என்பவர் சிக்கினார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில் நீராவி முருகன் பிடிபட்டது குறித்து ஆசிரியை வேலம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன் பிடிபட்டது நிம்மதி தருகிறது.
கத்தி முனையில் என்னிடம் செயினை பறித்த போது எனது உடலெல்லாம் நடுங்கியது. நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்த பின்னர், எனது ஸ்கூட்டியையும் எடுக்க அந்த நபர் (நீராவி முருகன்) முயற்சி செய்தார். அப்போது நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதாலேயே ஸ்கூட்டியை விட்டுச்சென்றார் என்றார் வேலம்.