தம்பி மீது அவ்வளவு பாசமா இருந்தாளே என் மகள்.. கொள்ளையனால் உயிரிழந்த நந்தினியின் தந்தை கதறல்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் கொள்ளையனால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பொதுமக்கள் ஆற்ற முடியாத கோபத்தில் உள்ளனர். அவரது தந்தையோ அழுதபடி உள்ளார்.
எனது மகளுக்கு தனது தம்பி மீது அவ்வளவு பாசம். அவனுக்காக அவள் செய்த தியாகங்கள் நிறைய. ஆனால் இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போய் விட்டாள் என்று அவர் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.
சீனிவாசபுரம் பகுதி மக்களும் நந்தினி மீது அளவு கடந்த பாசத்துடன் இருந்துள்ளனர். நல்ல படிப்பு படித்தவர், ஆசிரியையாக இருந்து வந்தவர் என்பதால் மதிப்புடன் வளைய வந்துள்ளார் நந்தினி.

ஆசிரியை நந்தினி
நந்தினி எம்.சி.ஏ படித்தவர் ஆவார். நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக இருந்து வந்தார். இவரது தந்தை கூலித் தொழிலாளி. மிகுந்த கஷ்டப்பட்டு தனது மகளையும், மகனையும் படிக்க வைத்தார்.

தம்பி என்றால் உயிர்
நந்தினிக்கு தனது தம்பி என்றால் உயிராம். தம்பி கேட்டது எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுத்து விடுவாராம். தம்பி மீது பாசத்தைப் பொழிந்து வந்துள்ளார். தம்பி நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

அக்காவின் செல்லப் பிள்ளை
இதற்காக தனது தம்பிக்கு தனது சம்பளத்தில் பெரும் பகுதியை செலவிட்டு வந்தார். அவரது தம்பியும், அக்காவின் அன்பையும், எதிர்பார்ப்பையும் புரிந்து நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார். இன்று நந்தினி இல்லை.

அடுத்த மாதம் திருமணம்
தனது மகளுக்கு திருமண வயது வந்து விட்டதால் வரன் பார்த்து வந்தார் வடிவேலு. அதில் ஒன்று முடிவாகவே அடுத்த மாதம் திருமணத்திற்குத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வந்தார். நிச்சயதார்த்தமும் விரைவில் நடைபெறவிருந்தது. ஆனால் இப்போது எல்லாம் முடிந்து போய் விட்டது என்று கூறி அழுகிறார் வடிவேலு.

பாசப் பறவை போனதே
தங்களின் செல்வமாக, பாசப் பறவையாக இருந்து வந்த நந்தினியை ஒரு கொள்ளையனின் அட்டகாசம் பறித்துக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையா ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது வடிவேலு குடும்பமும், சீனிவாசபுரமும்.












Click it and Unblock the Notifications