படிக்கும் போது மாணவர்களுக்கு போராட்டங்கள் எதற்கு?- ஆசிரியர்கள் அறிவுரை கூற உத்தரவு!
சென்னை: மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் என்று தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் தங்கள் கவனத்தை படிப்பில் மட்டுமே செலுத்தி முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். அவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாத வகையில் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையே சாரும்.
மாணவர்களை வற்புறுத்தி போராட்டங்களில் ஈடுபடச் சொன்னாலும் அவர்கள் அதில் ஈடுபடக்கூடாது. கல்வி நலன் மற்றும் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போதும், வகுப்பு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் நேரங்களிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications