ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன்? அதிரடி வியூகம்!
ஆர்கே நகரில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதன் போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன.
தீபா போட்டி
இத்தொகுதியில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளார். திமுக சார்பில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
மதுசூதனன்
ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுகவும் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்று தாங்களே உண்மையான அதிமுக என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
தனிப்பட்ட செல்வாக்கு
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் மதுசூதனனுக்கு கணிசமான தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறதாம். ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை அறுவடை செய்தவர் மதுசூதனன்.
இதனால் மதுசூதனனை நிறுத்தி வெற்றி பெற வைப்பது என்பது ஓபிஎஸ் அணியின் வியூகமாகும். மதுசூதனை நிறுத்தப்பட்டால் சேகர் பாபு போன்ற ஒரு வலுவான வேட்பாளரைத்தான் திமுக நிறுத்த வேண்டிய நிலை வரும். அத்துடன் இருவரும் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.