நீங்க வாங்க... அது போதும்... எடப்பாடியின் காத்திருப்பு- தப்ப நினைக்கும் ஓபிஎஸ்
சென்னை: இரட்டை இலை சின்னம் இல்லாததால், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' கட்சிக்குள் பன்னீர்செல்வம் வந்த பிறகு ஆட்டத்தைத் தொடங்க இருக்கிறாராம் அவர். சசிகலா எதிர்ப்பு அரசியல் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதுதான் இரண்டு அணிகளின் திட்டம் என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தி வருகிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். மீண்டும் அண்ணன் முதல்வராகிவிடுவார் என அவர் பின்னால் தொண்டர்கள் கூட்டம் அணிவகுத்துள்ளது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்காததால், பன்னீரை நம்பி வந்த எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
தர்ம யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாங்கண்ணே... மீதியிருக்கிற நாலு வருஷமும் தர்ம யுத்தத்துல செலவிட்டால் எப்படி?' எனக் கதறத் தொடங்கியுள்ளனர். ஆனால், சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்பதில் ஓ.பி.எஸ் உறுதியாக இருக்கிறார்.
கபட நாடகம்
இணைப்புக்காக பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறிக் கொண்டே எடப்பாடி அணி கபட நாடகம் ஆடுகிறது எனத் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார் ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், அணிகள் இணைப்புக்காக ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கிறோம். விரைவில் இரண்டு அணிகளும் இணையும் என அதிர வைத்தார்.
உண்மையான ஆட்டேம இனிமேல்தான்
இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர், பன்னீர்செல்வம் கட்சிக்குள் வந்த பிறகுதான் உண்மையான ஆட்டம் தொடங்க இருக்கிறது. கட்சிப் பதவிக்கு ஓ.பி.எஸ் முன்னிறுத்தப்பட்டால், தேர்தல் வரும்போது, எடப்பாடியை மீண்டும் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த அவர் விரும்ப மாட்டார். தானே முதல்வர் ஆக வேண்டும் என்றுதான் ஓ.பி.எஸ் ஆசைப்படுவார்.
விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
இரட்டை இலைக்காக சமாதானம் பேசிக் கூட்டி வந்தாலும், அமைச்சர்கள் யாரும் தங்கள் துறைகளை இழக்க விரும்ப மாட்டார்கள். மாஃபா பாண்டியராஜனும் சண்முகநாதனும் பதவி கிடைக்கும் என நம்புகிறார்கள். அவர்களுக்குப் பதவி கொடுத்தால், சசிகலா அணியில் அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் ஐந்து எம்.எல்.ஏக்களும் பதவியை எதிர்பார்ப்பார்கள். எனவே, யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் பழனிசாமி. முக்கிய துறைகளை வழங்க வேண்டும் என பன்னீர் அணியினர் எதிர்பார்ப்பதால்தான், பேச்சுவார்த்தை தொடங்காமலேயே இருக்கிறது.
உள்ளே வர வைத்து
கட்சிக்குள் பன்னீர் வந்த பிறகு, அவருடைய செல்வாக்கை குறைக்கும் பணியில் இறங்குவோம். கட்சியும் ஆட்சியும் எடப்பாடி பக்கமே வர வேண்டும் என விவாதித்து வருகின்றனர் கொங்கு அ.தி.மு.கவினர். இப்படி நடக்கலாம் என்பதை அறிந்து, இணைப்பை நடத்துவதற்கு ஏகப்பட்ட டிமாண்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது பன்னீர் அணி என்றார் விரிவாக.